146

அறத்துப்பால்

பிறனில் விழையாமை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Pakaipaavam Achcham Pazhiyena Naankum

Ikavaavaam Illirappaan Kan

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

பரிமேலழகர் உரை

இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பகை, பாவம், அச்சம், பழி ஆகிய இந்த நான்கு குற்றங்களும் பிறன் மனைவியினிடத்தே நெறிகடந்து செல்லுபவனைவிட்டு ஒருகாலும் நீங்காவாம்.

🌏 English Translations & Explanations

Explanation

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbor's wife.

Translation

Who home ivades, from him pass nevermore, Hatred and sin, fear, foul disgrace; these four.

English Couplet

Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four