19

அறத்துப்பால்

வான்சிறப்பு

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

Thaanam Thavamirantum Thangaa Viyanulakam

Vaanam Vazhangaa Thenin

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

பரிமேலழகர் உரை

வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).

மணக்குடவர் உரை

தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மழை பெய்யாவிட்டால் அகன்ற இவ்வுலகில் தானம் செய்வதும் தவம் செய்வதும் ஆகிய இரண்டு அறங்களும் நடைபெறா.

🌏 English Translations & Explanations

Explanation

If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

Translation

If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'.

English Couplet

If heaven its watery treasures ceases to dispense,Through the wide world cease gifts, and deeds of 'penitence'