199

அறத்துப்பால்

பயனில சொல்லாமை

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha

Maasaru Kaatchi Yavar

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

பரிமேலழகர் உரை

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது).

மணக்குடவர் உரை

பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

அஞ்ஞானத்திலிருந்து நீங்கிய தூய அறிவினையுடைய பெரியோர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.

🌏 English Translations & Explanations

Explanation

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.

Translation

The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanity.

English Couplet

The men of vision pure, from wildering folly free,Not e'en in thoughtless hour, speak words of vanity