207

அறத்துப்பால்

தீவினையச்சம்

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.

Enaippakai Yutraarum Uyvar Vinaippakai

Veeyaadhu Pinsendru Atum

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை

எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

பரிமேலழகர் உரை

எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை

எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின் கூறப்படும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

எவ்வளவு பெரிய பகையுடையவர்களும் ஒருவாற்றால் ஒருகால் தப்பிவிடுவர். ஆனால், தீச் செயலாகிய பகை நீங்காமல் பின்னேயே போய்க் கொல்லும்.

🌏 English Translations & Explanations

Explanation

However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

Translation

From every enmity incurred there is to 'scape, a way; The wrath of evil deeds will dog men's steps, and slay.

English Couplet

From every enmity incurred there is to 'scape, a way;The wrath of evil deeds will dog men's steps, and slay