250

அறத்துப்பால்

அருளுடைமை

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து.

Valiyaarmun Thannai Ninaikka Thaan

Thannin Meliyaarmel Sellu Mitaththu

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

பரிமேலழகர் உரை

வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்துத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

அருளில்லாதவன் தன்னைவிட எளியவர்கள் மீது அவர்களை நலியச் செய்யத் தான் செல்லும்போது, தன்னைவிட வலிமையுடையவர்கள் தன்னை நலியச் செய்ய வரும்போது, தான் அஞ்சி நிற்பதை நினைத்தல் வேண்டும்.

🌏 English Translations & Explanations

Explanation

When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.

Translation

When weaker men you front with threatening brow, Think how you felt in presence of some stronger foe.

English Couplet

When weaker men you front with threat'ning brow,Think how you felt in presence of some stronger foe