284

அறத்துப்பால்

கள்ளாமை

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan

Veeyaa Vizhumam Tharum

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

பரிமேலழகர் உரை

களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

களவு என்பதில் இருக்கும் வேட்கை அப்போது இனிது போலத் தோன்றிப் பயன்தரும்போது என்றும் நீங்காத துன்பத்தினைத் தந்துவிடும்.

🌏 English Translations & Explanations

Explanation

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

Translation

The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying pain.

English Couplet

The lust inveterate of fraudful gain,Yields as its fruit undying pain