29

அறத்துப்பால்

நீத்தார் பெருமை

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

Kunamennum Kundreri Nindraar Vekuli

Kanameyum Kaaththal Aridhu

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

பரிமேலழகர் உரை

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; 'கணம் ஏயும்' காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

உயர்ந்த குணமென்னும் குன்றின்மேல் நின்ற முனிவர்களுடைய கோபம், இருப்பது கணநேரமேயானாலும் கோபிக்கப்பட்டவர்களால் அக்கோபம் தடுப்பதற்கு முடியாததாகும்.

🌏 English Translations & Explanations

Explanation

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

Translation

The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure.

English Couplet

The wrath 'tis hard e'en for an instant to endure,Of those who virtue's hill have scaled, and stand secure