293

அறத்துப்பால்

வாய்மை

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

Thannenj Charivadhu Poiyarka Poiththapin

Thannenje Thannaich Chutum

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

பரிமேலழகர் உரை

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஒருவன் தனது நெஞ்சு அறிந்து பொய்யினைச் சொல்லாதிருப்பானாக; அவ்வாறு பொய்த்துப் பேசினால் அவனுடைய நெஞ்சமே அவனைத் துன்பத்தில் அடைவிக்கும்.

🌏 English Translations & Explanations

Explanation

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

Translation

Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one's spirit glows.

English Couplet

Speak not a word which false thy own heart knowsSelf-kindled fire within the false one's spirit glows