307

அறத்துப்பால்

வெகுளாமை

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

Sinaththaip Porulendru Kontavan Ketu

Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

பரிமேலழகர் உரை

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது. (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

நிலத்தினை அறைந்தவனுடைய கையானது அந்த நிலத்தினையடைதல் தப்பாதவாறு போல, சினத்தையே தனக்குக் குணமாகக் கொண்டிருப்பவன் கெடுவது உறுதி.

🌏 English Translations & Explanations

Explanation

Destruction will come upon him who regards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

Translation

The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing.

English Couplet

The hand that smites the earth unfailing feels the sting;So perish they who nurse their wrath as noble thing