374

அறத்துப்பால்

ஊழ்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.

Iruveru Ulakaththu Iyarkai Thiruveru

Thelliya Raadhalum Veru

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

சாலமன் பாப்பையா உரை

உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

பரிமேலழகர் உரை

உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு, திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு. (செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.).

மணக்குடவர் உரை

செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

உலகத்தில் ஊழினாலாகிய இயற்கை இரண்டு வகைப்படும். இரண்டு வேறுபட்ட தன்மையதாக இருக்கும். ஆதலால், செல்வம் உடையராதலும் வேறு. அறிவுடையராதலும் (தெள்ளியராதலும்) வேறு.

🌏 English Translations & Explanations

Explanation

There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

Translation

Two fold the fashion of the world

English Couplet

Two fold the fashion of the world: some live in fortune's light;While other some have souls in wisdom's radiance bright